Thursday, 3 January 2008

தனிமை!

வாழ்வின் சில நேரங்களில், என்ன செய்வதென்றறியாத திகைப்பு மனம் முழுமைக்கும் வியாபித்திருக்கும். மிக கொடியதோர் இருட்டுக் காட்டில், ஒருமையில் இருப்பது போன்ற ஒரு பிரமை, சுழல் காற்றின் நடுவில் சிக்கிக் கொண்டதோர் பயம், நம்மை பின் தொடர்ந்து கொண்டேயிருக்கும். யாருமற்ற பெரும் மணல் வெளியில், நம் காலடித் தடங்கள் மட்டுமே நிறைந்த ஒரு ஆதி அந்தமில்லா தனிமையில், ஓவென்று அழத்தோன்றும். சின்ன அரவம் கேட்டால் கூட துணை வந்து விட்டதோர் மகிழ்ச்சியில் திரும்பிப் பார்த்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். பேச யாருமின்றி தனக்குத்தானே பேசிக் கொள்ள ஆரம்பித்து, முடிவில் அதுவுமல்லாமல், வெறுமனே அமர்ந்திருக்கும் பொழுதுகளில், நிசப்தம், ஒரு கனத்தப் போர்வையைப் போன்றழுத்தி, முச்சுத் திணறடிக்கும். அதுவரை கேட்டறியாத, உலகத்தின் குரல், காதுகளில் ஒலிக்க ஆரம்பிக்கும். மரணம் போன்றதோர் பேரமைதி. இவ்வுலகில், மிக கொடூரமானது, தனிமைத்தான் போலும்!

No comments: